கோச்சடை திரு முத்தையா கோவில்

 

 

 

 

  

 

மதுரையிலிருந்து காளவாசல் வழியாக துவரிமான் செல்லும் பாதைக்கு இடையில் கோச்சடை எனுமிடம் உள்ளது. கோச்சடை பேருந்து நிறுத்தத்திலே மிகப்பழைய கோவிலொன்று தென்படும், பெரியதும் கூட அதுவே ஸ்ரீ முத்தையா திருக்கோவில்.அதில் குறிப்பிட்ட படி முத்தையாவுடன் உள்ளிருப்பது வில்லேந்திய நிலையில் உள்ள ஐயனார், ஆம் பூரணகாயபர் தான். பொதுவாக பூரண ஐயனார் செண்டாயுதத்துடன் காணப்படுவார். கொங்கு மண்டலத்தில் சில இடங்களில் சம்மட்டி போன்ற அமைப்புடைய ஆயுதத்துடனும் பூரணகாயபரின் சிலை கிடைக்கப்பெறும் ஆனால் வில்லேந்திய நிலையில் இங்கு இவர் காணப்படுவது சற்று வியப்புத்தரக் கூடிய செயல்தான். இக் கோவிலின் தல விருட்சமாக புளியமரம் இருக்கிறது. மேலும் கோவில் பூசாரி இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது எனக் கூறுகிறார். காயபரின் வரலாற்றைத் தொட்டே மரபு வழிக் கதையாக அவர் அப்படிக் கூறுகிறார் என எண்ணத் தோன்றுகிறது எனினும் முகப்பில் சற்றுப்பெரிய உருவத்தில் குதிரை மேல் இருக்கும் ஒரு படைத்தளபதியின் சிலை அதன் வரலாற்றை சற்றே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கோவிலுக்குள் இரண்டு பெரும் குதிரைகளில் போர்க் கோலத்தில் இரு வீரர்கள் இருப்பதை பார்க்க இயலும்.

  இடது புறக் குதிரையில் நீல நிறத்தில் (கருப்பசாமியாக) ஒரு வீரரும்,வலது புறத்தில் புரவியின் மீது செம்மை நிறத்தில் ஒரு வீரனும் வெஞ்சினம் கூறும் நிலையல் காணப்படுகிறார்கள். பொதுவாக அய்யனார் கோவில்களில் நீல நிறத்தில் இருக்கும் கருப்பு பெருமாலின் சாயலென்றும், உள்ளிருக்கும் ஐயனார் சிவனின் சாயலென்றும் குறிப்பிடப்படுபவர். (கீழக்குயில் குடி சமணர் மலைக்குக் கீழுள்ள மலையாண்டி அய்யனார் கோயிலை ஒப்பு நோக்குக). ஆனால் இங்கு நீல நிறத்தில் இருக்கும் கருப்பசாமியின் உருவத்திற்கு பூசாரி அவர்கள் வேறொரு கதையைக் கூறுகிறார். அதாவது அவர் கேரளத்திலிருந்து வந்ததாகவும், இங்கு வந்து இங்குகுள்ள வீரனுடன் இணைந்திருந்து அய்யனாருடன் அடைக்களம் புகுந்ததாகவும் கூறுகிறார்.  இந்தக்கதை எங்கோ கேட்டியிருப்பதைபோல் தோன்றுகிறதல்லவா...! ஆம்...! அழகர் கோவில் 18 ஆம் படி  கருப்புக்கும் இதே கதைதான்.

கேரள மந்திரவாதிகள் 18பேருடன் வந்த கருப்பு, அந்த  18பேரின் தலைகளையும் காவுவாங்கி 18படிகளாக வைத்துப் பின் அங்கேயே காவல் தெய்வமாக இருப்பதாக நாட்டார் வழக்குக்கதை சொல்லும். அதைத் தன் நூலில் எடுத்துக் காட்டியிருப்பார் ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள்.

    இந்த இரண்டு வாய் மொழிக் கதைகளிலும், கிடைக்கப்பெறும் செய்தி காயபர் அய்யனாருடன் கேரளத்திற்கு உண்டானத் தொடர்பு. இச் செவிவழிச் செய்தியின் மூலம் காயபருக்கும் கேரளத்திற்கும் என்னத் தொடர்பு இருந்திருக்க முடியும்...? என- எண்ணுவோர்க்கு நேரடி விடையாய் வந்துநிற்பது புகளூர் கல்வெட்டு. ஆம் கரூர் மாநகரம் சங்ககாலசேரர்களின் ஆட்சிப் பரப்பில் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டிருக்கும் ஊர். அங்கு இயற்கை மலையமைப்பின் மீது சேர அரசர் (ஆர் நாட்டார் மலை) பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங் கோ கொடையாக பள்ளி (பாழி) அமைத்துக் கொடுத்திருக்கிற அக்கல்வெட்டானது.

       

 

                மூதா அமண்ணன் யாற்றூர்

          செங்காயபன் உறைய்

          கோ ஆதன் சொல்லிரும் பொறை

          மகன்

          கடுங்கோன் மகன் னங்

          கடுங்கோன் ளங்கோ ஆக

          அறுத்த கல்

இக் கல்வெட்டில் துறவு நிலையில் செந்நிறத்தில் இருந்த காயபன் எனும் துறவிக்கு  இளங்கடுங்கோ அரசனாய் ஆன காலத்தில் செய்து கொடுத்தப் பள்ளி (கொடை நிலம்/இடம்) – என்று குறிப்பிடுகிறது. இது சேர அரசர்களுக்கும், காயபருக்கும் இடையே உள்ள உறவைத் தெளிவுற வைக்கும் சான்றாகவே பார்க்க இயலும். அந்த மரபாகவே இங்கிருக்கும் காயபர் கோவிலிலும் அது ஒரு மரபு வழிச் செய்தியாகக் கடத்தப்பட்டு, குதிரை மீதமர்ந்த கருப்புக்கு சொல்லப்பட்டு வருகிறது. பூரணர் தன்னுடைய இரு தேவிகள் பூரணம்,பொற்கலையுடன் கருவறையில் இருக்கிறார். அவருக்கு எதிராக 2- யானை சிலைக்கும் அதன் நடுவே சிறு நந்தி சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இது கரிச்சாத்தனாய்; சாத்தன் சைவத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட மரபை விளக்கும். நந்தி உண்டென்றால் சிவனும் இருக்க வேண்டுமல்லவா...ஆம்...! நந்திக்கு நேராக கருவறைப் பின் அவற்றில் லிங்கோத்பர்” – ஆக அவர் சிலை உள்ளது. எனினும் தனித்த 3- அடி உயரமுள்ள வெள்ளை யானை கருவறை முன் நிறுத்தப்பட்டிருப்பது, ஆசீவக சான்றின்றி வேறில்லை.அதைத்தாண்டி கோவிலின் கருவறைக்கு முன்பு சேர,சோழ,பாண்டியர்கள் மூவருக்கும் சிலை வைகப்பட்டுள்ளது.

       தமிழ் கெழு மூவர் காக்கும்

         மொழிபெயர் தே எத்த

என்று அக நானுறு மூவேந்தர்களைக் குறிப்பிடும். அம்மூவரும் ஆசீவகத்தைப் புரந்தவர்களா...? என்ற கேள்வியின் விடை ஆம்.

சேர மன்னன் ஆசீவகத் தோற்றுனர்களின் ஒருவரான காயபருக்கு பாழி அமைத்துக் கொடுத்திருப்பதும். (மேலது கல்வெட்டு). பூதப்பாண்டியன் படையில் இயக்கன் எனும் 3-ஆம் ஆசீவகத்துறவி (3-ம் அய்யனார்) இருந்தும்.

  தலையானங்கானத்து செருவென்ற  நெடுஞ்செழியப்பாண்டியன் அவருக்கு மீனாட்சி புரத்தில் பள்ளி செய்து கொடுத்திருப்பதும் அதற்கு சான்றாம், கரிகாலச் சோழன் இமயம் வரை சென்று போரில் வெல்லும் முன் மெய்ச்சாத்தனின்“-செண்டை வாங்கிச் சென்று போர்புரிந்தான் என்று சிலப்பதிகாரப் பாடல் அடியார்க்கு நல்லார் உரை விளக்கும் (5: 95-98) சிலம்பு.

கச்சி வளைக்கச்சி காம கோட்டம்

காவல் மெச்சி இனிதிருக்கும்

மெய்ச் சாதிதன்கைச் செண்டு

கம்பக்களிற்றுக் கரிகால் பெருவளத்தான்

 செம் பொற் கிரி திரித்த செண்டு.

 

எனவே சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களும் சாத்தனை வழிபட்டவர்கள் மற்றும் ஆசீவகத்தைப் புரந்தவர்கள் என்பது கண் கூடு. எனவே இந்த அய்யனார் கோவிலில் அம்மரபின் நீட்சியாகவே இம் மூவருக்கும் சிலைவைத்திருப்பது வெள்ளிடை மலை.

   இதற்கடுத்ததாக இயக்கி, ராக்காயி, வீரபத்ரர், முத்தையின் மாடன் என 1 பந்தி பரிவார தெய்வங்களும் கருங்கல் அமைப்பில் சிலைகளாக வைக்கப் பட்டுள்ளன. அவை அனைத்தும் உக்கிரக் கோலத்தில் பலித்தெய்வங்களாகவே காட்சியளிக்கின்றன. அவற்றிற்கிடையே லாட முனி சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தன்னுடைய அழகர் கோவில் கள ஆய்வின்பொழுது கால் மடக்கி இருக்கும் லாட முனியும்,லாடமுனி ஏறி ஆடுபவர்களும் வேற்று மொழியில் உளறுவதை எடுத்துரைத்திருப்பார். ஆசீவகத் தத்துவ இணைப்பில் பங்கெடுத்த 7-முனிகளில் ஒருவராகவே இவரைப் பார்க்க இயலும். ஏனெனில் லாட தேசம்“-என்பது தற்பொழுதுள்ள குஜராத்தைக் குறிப்பது அதற்கான நிறை சான்றாக அமையும். அதற்கடுத்து நாகப்புற்றும் நாகச் (ஒரு தலை ,2-நாகப் பிணைப்பு) சின்னங்களும், சிலைகளும் செறிந்து  காணப்படுகின்றன அவை நாக வழிபாட்டுக்கு உரியவைதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

   நம் எண்ணமெல்லாம்  அங்கிருக்கும் 5 மற்றும் 7 தலையுள்ள தனித்த பாம்புகள்தான், தனித்த நாகச் சிலைகளும், நாகப் பிணைப்பும் நாக வழிபாட்டில் ஒரு அங்கம். இதைப்பற்றிக் குறிப்பிடும் மலைபடுகடாம் பாடலானது பின்வருமாறு.

          கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே

       குறிக் கொண்டு மரங் கொட்டி நோக்கி

       செறிதொடி விறலியர் கை தொழு உப்

       பழிச்சவறிது நெறி ஒரி வலம் செயாக் கழிமின் (199-202)

-என ஒரு பாணன், பரலையுடைய பள்ள நிலத்தில் பாம்புகள் மறைந்துக் கிடக்கும் குழிகள் உண்டு, அக்குழிகளை மனத்தாலே குறித்துக் கொண்டு அப்பாம்பு மனம் மகிழும் படி வணங்கிச் செல்லுங்கள் என்று சொல்லும் கூற்று நாக வணக்கத்திற்குச் சான்றாக அமையும். மேலும் இதைப் பற்றிய பல்வேறு குறிப்புகளை ஆய்வாளர்கள் பக்தவச்சல் பாரதி மற்றும் ரா.செல்வராசு தங்கள் (பண்பாட்டியர் நோக்கில் பண்டைத் தமிழர் சமய மரபுகள், -143) நூலில் விளக்கிருப்பார்கள். ஒரு பாம்பு தனித்தோ, பாம்புகள் இரண்டு பிணைந்தோ இருக்கக்கூடிய கற்சிலைகளும் அதற்கான வணக்கமுறைகளும் நாக வணக்கத்தையே சார்ந்தவை. ஆனால் நம் சந்தேகமோ அந்த 5- மற்றும் 7- தலை நாகத்தின் மீது தான். புராணங்களில்  ஆதிசேஷ்டன் என்ற பெயரில் விஷ்ணுவிற்கு படுக்கையாகவும், பாற்கடலைக் கடையும் பொழுது வாசுகி எனும் பெயரில் வரும் பாம்பாகவும், காளிங்க நர்த்தனத்தில் கிருஷ்ணணிடம் தோற்றுப் போகும் காளிங்கனாகவும் இவைகள் குறிக்கப்படுகின்றன. அசுர குலங்களோடு தொடர்புடையவை, பொதுவாக வேத வழக்கிற்கு எதிரான (தென்குல மக்களையே)-வர்களையே குறிக்கும் என டாக்டர். அம்பேத்கரும்,பேராசிரியர் தேவி பிரசாத் சாட்டோ பாத்யாயும் கூறுவர் எனில் இந்த 7-தலை நாகத்துடன் நமக்குண்டானத் தொடர்பு எது என்று பார்த்தால்,  நாகக்குலத் தலைவன் தரணேந்திரனும் அவர் மனைவி பத்மாவதியும் வருகின்றனர். இவர்கள் இருவரும் பார்சுவநாதர் அதவாது ஜெயினத்தின் 23 ஆவது தீர்த்தங்கரரானவருக்கு யக்சன் (இயக்கன்) யக்சியாக இருந்து பாதுகாப்பு கொடுத்தவர்கள்.  கமடன் எனும் அரக்கன் தாக்க வந்த பொழுது இவ்விருவரே பார்சுவநாதருக்குப் பாதுகாப்பு அரணாக ஆழ நின்றுக் குடைபிடித்ததாக பார்சுவநாதர் அம்மானை விளக்கும்.  

        

              ஒவ்வாத தரணபதிக்கு ஆசனங்கம்பிக்க

         இதேதென்று பார்த்து அவதித்திருநானி (பக் 22)

                சம்பரன் தான் செய் வினைக்கு  சக்கிர

            பணா முடியாய் உம்பர்திருமுடிமேல்

            ஓங்கிக் கவித்து நின்றார் வச்சிராத

             பத்திரத்தால் வல்லி பத்மாவதியும்

அவர்கள் நாகர்குலத்தவர் என்றும் அவர்கள் தன் தலையை விரித்து பார்சுவருக்கு பாதுகாப்பு அளித்ததை இப் பாடல் விளக்குகிறது. நாகர்கள் நாகரீக வளர்ச்சி அடைந்த தென் தமிழ் மக்களே என்று அம்பேத்கரும் குறிப்பிடும் பொழுது.

  “The nagas were very ancient people it must also be remembered that the nagas were in no way an un civilised people not only did the naga people occupy a high cultural level”    - THE UN TOUCHABLE

அவர்கள் பார்சுவநாதரைக் காத்த செயல் தென் தமிழகத்திற்கும், வடக்கில் இருந்த பார்சுவருக்கும் இருந்த தொடர் பேயாம். ஆசிவகத்தில் மற்கலி எனும் அய்யனார்

ஆதி நாதர் மற்றும் பரர்சுவநாதரின் வழியில் வந்த ஆசீவகத் தீர்த்தங்கரர் எனும் உண்மையால் அதனாலே புற்றுக்கு அருகில் நாக வணக்கத்துடன், பரர்சுவரின் அடையாளமாக 7- தலை நாகமும் வைக்கப்பட்டுள்ளது.

   இதற்கடுத்துக் கோவில் பின்புறம் தச அவதாரக் காட்சிகளுடன் திருமாலின் சிற்பங்கள் பல வண்ணங்களில் வைக்கப்படுள்ளன இது மாலியம் ஆசீவகத்திரற்கு அளித்த அரவணைப்பு அன்றி வேறேதுமில்லை (கஜேந்திர மோட்சக் கதையை இங்கு ஒப்பு நோக்குதல் வேண்டும்).

   இக் கோவிலின் ஊர்வலத் தேருக்குக் கீழே உடைந்த ஒரு கல் தூண் உள்ளது. அதில் 100-200 ஆண்டுகளுக்கு ஒப்பக் கல் வெட்டு ஒன்று பதிக்பிக்கப்பட்டுள்ளது.

   உ த வு- ச வேண்கன் ம

    புகளும் பெரும்மா(ன்)-

     சதா செருவை

இதுபோல கல்வெட்டனது அதில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஆசீவக வழக்கம் சுட்டும் நிறமாய் வெண்” – என்று இருப்பது நம்மை ஈர்த்த ஒன்று. அதைத் தாண்டி புகளும் பெருமான்”-என காயபர் பல இடங்களில் புகழோடு இருப்பதைச் சுட்டிக்காட்டும் விதமாய்

இக் கல்வெட்டு அமைந்திருப்பது வியப்பு.

சேவுகந்த பெருமான் “- எனும் பெயர்களில் காயபருக்குக் கோவில் உள்ளதும் (மதுரை தீக்கதிர்) இங்கு ஒப்ப நோக்கத்தக்கது.

  

இதைத்தாண்டி 1892-ஆம் ஒரு சமூகத்தாரால் இக் கோவில் புணரமைப்பு செய்யப்பட்டு அதற்கானக் கல்வெட்டும் கோவிலின் நுழைவு வாயிலிலே கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு, அக்கல் வெட்டானது.

               1892

செப்டம்பர் மி 26

(92) கூ உ /த மிள்/ வி

காரி / மு- புரட்டாசி

சி/மி யக/கோ

ச் சடை /திறம்.

கீ லருத்கும்

மா யிரு ளாண்    

டிக் தேவன் மக

ன் கடி முத்துக்

மிதவன்

ஜா திச்

க் கரை

-ர் த்தி

- என்று கோவில் புணரமைப்பைச் செய்தவர் பெயரும் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பு. வருடா வருடம் மாசி மாதத்தில் இக் கோவில் திருவிழா ஊர் மக்களால் எடுக்கப்படுகிறது. சிறப்பான விசயம் என்ன வென்றால். புரட்டாசி மாதம் இன்னொருத் திருவிழாவும் எடுக்கப்படுகிறது. அது பனைமரத்திலிருந்து பல்லி ஒலி எழுப்புவதாகவும், அதை நல்ல சகுனமாக எடுத்து புரட்டாசி மாதத்திலும் மற்றுமொரு திருவிழாவை எடுக்கிறார்கள். இது சங்ககாலப் பாடலின் தாக் கமாகவே இங்குக் காண முடிகிறது.

    இடுஉ ஊங்கன் இனிய படூஉம்

     நெடுஞ் அவர்ப் பல்லியும் பாங்கில்

     தோற்றும் மனைமா நொச்சி மீமிசை

     மாச்சினை வினைமான் இருங்குயில்

     பயிற்றலும் பயிற்றும்   ( நற்றி 246:1-4 )

திணைவாழ் மக்கள் பல்லியின் ஒலியையும்,குயிலின் கூவலையும் நல்ல செயல் நடக்கப் போவதைக் கூறும் கணிப்பாக (சகுனம்)பார்த்தனர் என்பதை நற்றிணை விளக்குகிறது. அம்மரபு இன்றளவும் கடத்தப்பட்டிருப்பது மானுட வழக்கின் மரபுத்தொடர் சங்கிலியாகவே கருத முடிகிறது.

        

    முத்தையா எனும் பெயரே கருப்புகளுக்கு உண்டானது. பாண்டியர்களின் கொற்கை முத்திற்கு உலகமே அலைந்தபாடு நாம் அறிந்ததே. அவ்வழியில் வந்த அய்யனரருக்கு இவர்களுடனே கோவில் அமைந்திருப்பது பண்பாட்டின் மிக முக்கியக் கூறே.

வைத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.”

 

ஆய்வுக்குதவிய நூட்கள் :-

*       அழகர் கோவில் தொ.

*       சங்கக்கால தமிழகக் கல்வெட்டு மயிலை சீ. வேங்கடசாமி

*       அகநானுறு 3

*       சிலப்பதிகாரம் (5-95-98)( அடியார்க்கு நல்லார் உரை )

*       ஆசீவகமும் அய்யனார் வரலாறும் நெடுஞ்செழியன்.க

*       நாகர் வரலாறு -  DR .சிவ.விவேகானந்தர்

*      மலைபடுகடாரம் (199-202)

*       பண்பாட்டியல் நோக்கில் பண்டைத் தமிழர் சமய மரபுகள்   பக். (143) பக்தவச்சல பாரதி & நா.செல்வராசு

*       THE   UNTOUCHABLES – DR. அம்பேத்கர்

*       உலகாயதம் தேவி பிரசாத் சாட்டோபாத்யாயா

*       பார்சுவநாதர் அம்மானை

*      நற்றிணை (246: 1-4)

*       திருக்குறள் 50.